Nāṭṭup pāṭalkaḷ


நாட்டுப் பாடல்கள்

நாட்டுப் பாடல்கள்

நாட்டார் பாடல் அல்லது நாட்டுப்புற பாடல் எனப்படுவது நாட்டுப்புறங்களில் வாழும் மக்கள் தங்கள் அன்றாட வாழ்விலும், தொழிற்களங்களில் பணிநேரங்களில் களைப்பைக் குறைக்கும் வகையிலும், விழாக்களிலும் பாடும் பாடல்களைக் குறிக்கும். நடுகை(நடவு) மற்றும் ஏற்றம் போன்ற கூட்டுப் பணிகளின்போது பணியாளர்களிடையே ஓரிசைவை உண்டுபண்ணுவதிலும் இவற்றின் பங்கு உண்டு. இவை பெரும்பாலும் அந்தந்தக் காலகட்டத்தில் ஏற்படும் நிகழ்ச்சிகளின் மீதான நாட்டார் கருத்தை எதிரொலிக்கும்.

நாட்டுப் பாடல்கள், நாடோடிப் பாடல்கள், வாய்மொழி இலக்கியம், ஏட்டில் எழுதாக் கவிதைகள், காற்றில் வந்த கவிதைகள், மக்கள் பாடல்கள், மரபுவழிப் பாடல்கள், பாமரர் பாடல்கள், பரம்பரைப் பாடல்கள், நாட்டார் பாடல்கள் என பல்வகைப் பெயர்களால் நாட்டுப்புறப் பாடல்கள் அழைக்கப்படுகின்றன

நாட்டார் பாடல் என்பது "அதன் உருவாக்கத்தில் இல்லை, அதன் பரவுவகையில்தான் உள்ளது" என்பது சில ஆய்வர்களின் கருத்து. அதாவது, ஒரு எழுத்தறிவுபெற்ற கவிஞர் முறைப்படி ஒரு கவிதை எழுதி அது நாட்டாரின் விருப்பத்திற்கேற்பவும், அவர்களது வாழ்வினுடன் தொடர்புடையதாகவும் அமைந்து அவர்களுடைய பொதுப்பயன்பாட்டிற்கு வருமானால் அதையும் நாட்டார் பாடல் என்று குறிப்பிடலாம்

நாட்டார் பாடல்களின் கவர்ச்சியான இசையும் பயிற்சி பெறாதவர்களாலும் பாடக்கூடிய எளிமையான ஸ்தாயி (சுர நிலை) எல்லையும், மெட்டும், சாதாரண நடையிலும், கதை செப்பும் நடையிலும் அமைந்தமையே இவற்றின் சிறப்புக்குக் காரணமாகும். உரத்த குரலில் பாடப்படுவது இவற்றின் மற்றொரு இயல்பு. இப்பாடலைப் பாடுவோர் தமது அன்றாடப் பணியுடன் கலந்த பாடல் இசையாக அமைத்துவிடுகின்றனர். பெரும்பாலும் எழுதப்படாமல் இருப்பதும், இயல்பாக வழக்கில் பரவி, மேம்படுவதாலும், மூத்தோர் பாடிய பாடல்களாக இருப்பதாலும் முதலில் தொடங்கியவர் பெயர் தெரிவதில்லை. சூழ்நிலைக்கேற்ப பாடல்களை இயல்புப்படுத்திப்பாடும் தன்மையும் இந்நாட்டார் பாடல்களில் காணப்படுகிறது.

நாட்டார் பாடலை நாட்டுப்பாடல், தெம்மாங்கு, பாமர ஜனகானம், பொதுஜனகானம், கிராமியபாடல், எனப் பலவாறு அழைப்பர். பழங்குடிகள் தம் கருத்துக்களையும், இன்ப துன்ப உணர்வுகளையும் பிறருக்குப் புலப்படுத்தக்கூடியவாறு மொழி வளர்ச்சி பெற்றிருக்காத சூழ்நிலையில் ஏதோ ஒரு வகையில் ஓசை முறைகளையும் பயன்படுத்தி இருக்கலாம். மொழி துணையாக வந்த போது முதற்பாடல் தோன்றியிருக்கக் கூடும். ஒருவர் ஓர் அடியைப்பாட, மற்றொருவர் மற்றைய அடியைப்பாட வினா விடையாகவும் நாட்டார் பாடல்கள் அமைந்தன.



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Vāḻkkaiyiṉ arttam